இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் – ஆசிரியர் பணியிடை நீக்கம்

கடலூர் : கீழ் அழிஞ்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த பிரியதர்ஷினி என்ற இருளர் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி, பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 16ஆம் தேதி, பிரியதர்ஷினி பள்ளிக்கு சென்ற போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் ரேவதி, மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பவில்லை. மாறாக, பள்ளியிலேயே படுக்கவைத்து பின்னர் இரண்டு சக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் குழந்தையின் நிலை மேலும் மோசமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் சிகிச்சை பலனளிக்காமல் ஜூன் 19ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, குழந்தையின் மரணத்திற்கு ஆசிரியரின் அலட்சியே காரணம் என கூறிய பெற்றோர்கள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சம்பவத்தையடுத்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் கோட்டாட்சியர் அபிநயா ஆகியோர் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், தலைமை ஆசிரியர் அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதலில் அவரை பணியிட மாற்றம் செய்து, பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரியதர்ஷினியின் மரணத்திற்கு நீதியரசும், எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், பள்ளியை முற்றுகையிட்டு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியதால், சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version