தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கும், முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையிலான கருத்து மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கை, சத்தியமூர்த்தி பவனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு சிலரின் சுயநலத்திற்காகத் தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று அவர் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளதுடன், கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் ராகுல் காந்தியின் கொள்கைப் பிடிப்புள்ள அரசியலுக்கு நேர் எதிராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, வாக்குச்சாவடி முகவர் பட்டியலைக் கூட வழங்க விடாமல் முடக்கும் போக்கு காங்கிரசில் நிலவுவது மிகுந்த கவலை அளிப்பதாக ஜோதிமணி வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தற்போது எதிர்கொண்டுள்ள மதவாத மற்றும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராகக் காத்திரமான அரசியலை முன்னெடுக்க வேண்டிய சூழலில், காங்கிரஸ் கட்சி தனது பொறுப்பை உணராமல் வெறும் கூட்டல் கழித்தல் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதாக ஜோதிமணி சுட்டிக்காட்டியுள்ளார். காமராசர் மற்றும் ஈ.வெ.ரா போன்ற தலைவர்கள் கட்டிக்காத்த சமூக நீதி மற்றும் சுயமரியாதை அரசியலைத் தற்காப்பதில் கட்சித் தலைமை தடுமாறுவதாகக் கூறிய அவர், “60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் கட்சிக் கொடியை ஏந்தி நிற்கும் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நாம் துரோகம் செய்துவிடக் கூடாது” என்று எச்சரித்துள்ளார். சித்தாந்த ரீதியான போராட்டங்களை முன்னெடுக்காமல், உட்கட்சிப் பூசல்களிலேயே கட்சி மூழ்கிக் கிடப்பது தன்னை மனச்சோர்வடையச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். ஜோதிமணியின் பதிவு தமக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், கரூர் மாவட்டத்தில் நிலவும் உட்கட்சிப் பிரச்னைகள் தொடர்பாக ஏற்கனவே தனது மனசாட்சிக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அது குறித்த அகில இந்தியத் தலைமையின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். “அழிவின் பாதையில் இருந்து கட்சியை மீட்டெடுக்கவே நாங்கள் 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்; கிராம கமிட்டிகளை உருவாக்கி வருகிறோம்” என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், ஜோதிமணியின் கோபம் நியாயமானது என்றாலும், பொதுவெளியில் இத்தகைய கருத்துக்களைப் பகிர்ந்தது ஆச்சரியமாக இருப்பதாகவும், அவரிடம் பேசி உரியத் தீர்வு காணப்போவதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக காங்கிரஸின் முக்கியப் முகமான ஜோதிமணி எழுப்பியுள்ள இந்த ‘சுயநல அரசியல்’ புகார், கூட்டணிக் கட்சிகளிடையேயும் பேசுபொருளாகியுள்ளது. கட்சியின் பாரம்பரியமான மரியாதையைக் காக்க உண்மையான தொண்டர்கள் எழ வேண்டிய நேரம் இது என்ற ஜோதிமணியின் அழைப்பு, கட்சிக்குள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

















