வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை… தென்கொரியாவின் புதிய அதிபர் அழைப்பு !

தென்கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மக்களுக்கான உரையில், அவசரநிலை ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் பிறகு, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்கத் தீர்மானத்தை கொண்டு வந்தன. இதன் விளைவாக யூன் சுக் இயோல் பதவி நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டாலும், தென்கொரியாவின் வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதல் அதிபர் என்ற அடையாளம் அவருக்குத் தோன்றியது.

இவ்வழக்கு தென்கொரிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த வாரம் வந்த தீர்ப்பில், நீதிமன்றம் யூன் சுக் இயோலை அதிகாரப்பூர்வமாக பதவி நீக்கம் செய்து அதிரடியான உத்தரவை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில், நேற்று (ஜூன் 3) புதிய அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மனித உரிமை வழக்கறிஞரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான லீ ஜே மியுங் மற்றும் மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான கிம் மூன் சூ ஆகியோர் மோதினர். இதில் 49.42% வாக்குகளை பெற்று, லீ ஜே மியுங் தென்கொரியாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த லீ ஜே மியுங் ?

தேர்தலுக்கு முன்பும் பிந்தும் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருந்தவர் லீ ஜே மியுங் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பின் பேசிய அவர்,

“வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் நாட்டை ஒன்றிணைக்க பாடுபடுவேன். இனி இராணுவச் சட்டம் அல்லது அதிகாரக் கேடு மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வேன்” என உறுதியளித்தார்.


61 வயதான லீ ஜே மியுங், ஒரு புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞர். கடந்த சில ஆண்டுகளில் தென்கொரிய அரசியலில் முக்கிய மனிதராக வளர்ந்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னர், அவர் எட்டு ஆண்டுகள் சியோங்னாமின் மேயராகவும், பின்னர் மூன்று ஆண்டுகள் கியோங்கி மாகாண ஆளுநராகவும் பணியாற்றினார்.

2022ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், யூன் சுக் இயோலிடம் 6% வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனினும், அவர் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு, கொரிய அரசியலில் வலுவான தாக்கம் ஏற்படுத்தினார்.

2024ஆம் ஆண்டு, பூசானில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றின்போது, அவரது கழுத்தில் ஏழு அங்குல நீளமுள்ள கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது. உயிருடன் மீண்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, அதற்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்றம் செல்ல முயன்ற லீ ஜே மியுங், காவல்துறையின் தடைகளை மீறி தேசிய சட்டமன்ற சுவர்களில் ஏற முயன்றார். அந்தக் காட்சி வைரலானது. பின்னர், நாடாளுமன்றம் இராணுவச் சட்டத்தை நிராகரித்து, ஜனநாயகத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

Exit mobile version