பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்தியா பாகிஸ்தானின் மீது எதிர்தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கையால், இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், பின்னர் தாக்குதல் நிறுத்தம் என இருதரப்பும் அறிவித்தன.
இந்த ஆபரேஷனுக்கு விளக்கமளிக்கும் வகையில், கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் ராணுவ அதிகாரிகள், ஊடகக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்த நடவடிக்கை எப்படி திட்டமிடப்பட்டது என்பதை விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்த சூழலில், கர்னல் சோபியாவை இலக்காகக் கொண்டு சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டது மத்தியபிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா. “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களின் சகோதரியை நாங்கள் அனுப்பி வைத்தோம்” என்ற வகையில் சோபியாவை அவதூறாக குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை கிளப்பியது.
பின்னர், மக்கள் எதிர்வினையை தொடர்ந்து, தனது பேச்சை தவறாக புரிந்துகொண்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கெதிராக அமைச்சர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
“ராணுவ அதிகாரி சோபியாவை அவதூறாக விமர்சித்த பாஜக அமைச்சர், இப்போது வழக்கில் இருந்து விடுபட வேண்டி மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அவரது பேச்சு மன்னிப்பு கேட்கும் அருகதை கூட இல்லாத வகையில் இருந்தது,” என நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.