தன்னை தாக்கியவர்கள் மீதும், பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர்கள் மீதும் ஆடு திருடப்பட்டது தொடர்பாக திடீர் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மூதாட்டி ஒருவர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அலுவலக வாயில் அருகே அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாலட்சுமி என்ற மூதாட்டி தனக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ள நிலையில் மயிலாடுதுறையில் உள்ள பழுதடைந்து மூடப்பட்ட தருமபுரம் மகளிர் மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தில் தனியாக வசித்து வருவதாகவும், ஆடுகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் தனது ஆடுகள் திருடப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார், தனது மகன்கள் தன்னை ஏமாற்றி தன்னுடைய சேமிப்பு பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மேலும் தன்னிடம் ஆடு வாங்கி விற்கும் கிளியனூரை சேர்ந்த ஜியாவுதீன் என்பவர் தனது பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாகவும், பணத்தை கேட்டால் தன் மீது தாக்குதல் நடத்துவதாகவும் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். போலீசார் மகன்களை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளதாகவும் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியதற்கு புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை, இப்போது எப்படி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பி போலீஸாருடன் செல்ல மறுத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி மூதாட்டியை அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version