உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் குறைந்தது 8 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாநிலங்களில் பெய்துவரும் இடையறாத கனமழை காரணமாக, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இமாச்சல் பிரதேசம், ஜம்மு–காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் நேற்று இரவு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் பல குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகவும், இதுவரை 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல வீட்டு விலங்குகளும் புதைந்து போனதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு
மேகவெடிப்பு காரணமாக அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கேதார்நாத் பள்ளத்தாக்கின் லாவாரா கிராமத்தில், மோட்டார் சாலையில் இருந்த பாலம் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது. செனகாட்டில் நிலைமை மோசமடைந்துள்ளது.
ருத்ரபிரயாக் ஹனுமான் கோயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஹல்த்வானி-பீம்தால் சாலை, மலைச்சரிவில் இருந்து இடிபாடுகள் சரிந்ததால் முற்றிலும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “ருத்ரபிரயாக் மாவட்டத்தின் பசுகேதர் தாலுகா, படேத் துங்கர் டோக் மற்றும் சாமோலி மாவட்டத்தின் தேவால் பகுதிகளில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சில குடும்பங்கள் சிக்கியுள்ளனர் என்ற சோகமான செய்தி கிடைத்துள்ளது. உள்ளூர் நிர்வாகத்தால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, தேவையான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறேன்,” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, ருத்ரபிரயாக், பாகேஷ்வர், சாமோலி, ஹரித்வார் மற்றும் பித்தோராகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
மேகவெடிப்பு என்றால் என்ன ?
சுமார் 20–30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், அதை மேகவெடிப்பு என அழைக்கின்றனர். துளித் துளியாக அல்லாமல், அருவிபோல் மழை கொட்டுவதால் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மின்சார தாக்குதல் போன்ற பேரழிவுகளை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் இத்தகைய மேகவெடிப்புகள் பெரும்பாலும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகம் ஏற்படுகின்றன. இதை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாது என்பதும் வானிலை ஆய்வாளர்களின் கருத்தாகும்.
முன்னதாக, ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக நினைவுகூரப்படுகிறது.