ஈரோடு மண்டல கபடி போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மாணவிகள் சாதனை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில், ஈரோடு மண்டல அளவிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் மிக உற்சாகமாக நடைபெற்றன. விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், மண்டலத்திற்கு உட்பட்ட ஆறு முன்னணி பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் அணிகள் பங்கேற்றுத் தங்களது அசாத்தியத் திறமைகளை வெளிப்படுத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் அணி அபாரமாக விளையாடி முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. சேரன் பாலிடெக்னிக் கல்லூரி அணி இரண்டாமிடத்தைப் பெற்று ரன்னர்-அப் கோப்பையைக் கைப்பற்றியது.

வெற்றி பெற்ற மாணவிகளின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பாராட்டு விழா கல்லூரி முதல்வர் எஸ்.பிரகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரிச் செயலாளரும், பவானி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்குப் வெற்றிக் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார். அப்போது பேசிய அவர், “கல்விக்கு இணையாக விளையாட்டும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியமானது. குறிப்பாக, கிராமப்புற மாணவிகள் கபடி போன்ற பாரம்பரிய வீர விளையாட்டுகளில் மாநில மற்றும் தேசிய அளவில் சாதிக்கத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் நமது கல்லூரி தொடர்ந்து வழங்கும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து, கல்லூரி முதன்மை செயல் அதிகாரி ஜி.கௌதம் மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். விளையாட்டுத் துறையில் சாதிக்கும் மாணவிகளுக்குக் கல்விக்கட்டணச் சலுகை மற்றும் சிறப்புப் பயிற்சிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்நிகழ்வில் பிசியோதெரபி கல்லூரி முதல்வர் நந்தகுமார், கல்லூரித் துணை முதல்வர் பி.மணி, அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர். போட்டிக்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் கள ஏற்பாடுகளைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் என்.பிரபாகரன் திறம்படச் செய்திருந்தார். மண்டல அளவில் வெற்றி பெற்ற இந்த மாணவிகள் அணி, அடுத்தகட்டமாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version