சென்னை: குடிபெயர்ந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை வங்கிச் சேவை வட்டத்துக்குள் கொண்டு வர சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், “நமது வங்கித்துறையினர் விவசாயிகளுக்கும், ஊரக பொருளாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். உரிய காலத்தில் கடன் வழங்கி வேளாண்மையை லாபகரமாக்க வங்கிகள் உதவி செய்ய வேண்டும். மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சியின் இன்ஜின்களாக மாற்றுவதில் வங்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு,” என்றார்.
அவர் தொடர்ந்து, “விளிம்பு நிலை மக்களை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குடிபெயர்ந்து வரும் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் ஆகியோரை வங்கி சேவைக்குள் கொண்டு வர வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் வங்கிகளின் பங்கு மிகுந்தது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் வரை, வங்கிகள் பல்வேறு வழிகளில் அரசுக்கும் மக்களுக்கும் துணை நிற்க முடியும்,” என்றும் வலியுறுத்தினார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் வெளிப்படையாக நடைபெறும்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் தனியார் வங்கிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் முழுமையான வெளிப்படை தன்மையுடன் நடைபெறும்,” என்று தெரிவித்தார்.
விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, தமிழிசை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல அதிகாரிகள் வரவேற்றனர்.