திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் அமைந்துள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி முருகன் கோயில். இக்கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாகமாகவும், சோழநாட்டு திருச்செந்தூர் என்றும் போற்றப்படுகிறது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் மாயையால் தரங்கம்பாடி கடலில் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது மகனான இரணியாசூரனை வதம் செய்து சாப தோஷம் ஏற்பட திருவிடைக்கழி தலத்தில் முருகப்பெருமான் சிவனை பூஜித்து தனக்கு ஏற்பட்ட சாபதோஷம் நீங்க பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றிப் புகழப்பட்டுள்ள இக்கோவில் முருக பெருமானும், சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே திருத்தலமாகும். இங்கு சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே கருவறையில் எழுந்தருளி உள்ளதால் முருக பெருமான் சிவ சொரூபமாக காட்சி அளிக்கிறார். சிறப்புமிக்க இக்கோயிலில் இன்று பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் அலகு காவடிகள் எடுத்து ஆலயம் வந்தடைந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் குரா மரத்தடியில் உற்சவமூர்த்திக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நூற்றுக்கணக்கானோர் கண்டு தரிசனம் செய்தனர்.

Exit mobile version