தொடர் விடுமுறை தினம் என்பதாலும், ஆடிக்கிருத்திகை என்பதாலும் புகழ்பெற்ற முருகன் ஆலயமான வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் பல்லாயிரக்கண பக்தர்கள் குவிந்தனர், தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன :-
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் சமயக்குரவர்களால் பாடல் பெற்ற பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் செல்வமுத்துக்குமாரசாமி ஆக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஆலயமாக போற்றப்படும் இந்த ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு வழிபாடு செய்தனர். தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வ சேனா உடன் கார்த்திகை மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. சோடச தீபாராதனை செய்யப்பட்டது. தர்மபுரம் ஆதின குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர் விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் குவிந்தனர்.
