வாஷிங்டன் : பலமுறை ஒத்திவைக்கப்பட்டதாக இருந்த Axiom-4 விண்வெளி மிஷன், இப்போது நாளை (ஜூன் 25) புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிஷன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு (ISS) செல்லவுள்ளனர்.
Axiom Space நிறுவனம் முன்னெடுத்து வரும் இந்த திட்டத்தில், இந்தியா, போலந்து, ஹங்கேரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் முறையே சுபன்ஷு சுக்லா, ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, திபோர் கபு மற்றும் பெக்கி விட்சன் ஆவார்கள்.
முன்னதாக ஜூன் 8ஆம் தேதி இந்த மிஷன் புறப்படவிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. பின்னர் திரவ ஆக்சிஜன் கசிவும், தொழில்நுட்ப கோளாறுகளும் காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, வீரர்களின் உடல்நிலை, வானிலை உள்ளிட்ட காரணங்களால் மிஷன் நாளை (ஜூன் 25) தொடங்கும் வகையில் ஐந்தாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டதாக SpaceX நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மிஷன் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படும். வீரர்கள் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி, 60க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.