பாமக இணை அமைப்பான பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தீர்மானம் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
கூட்டத்தில், பாமக கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸை மீண்டும் தேர்வு செய்வதாக ஒருமன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வரும் தேர்தல் தொடர்பான கூட்டணி முடிவுகள் மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய அரசியல் முடிவுகளை ராமதாஸ் எடுப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அன்புமணி ராமதாஸை பாமக உறுப்பினரிலிருந்து நீக்கிய முடிவையும் செயற்குழு அங்கீகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணி நீக்கப்பட்டு, ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் பாமக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

















