குழப்பத்தில் எஸ்ஐ தேர்வு: தொழில்நுட்பக் கோளாறா அல்லது திட்டமிட்டத் தவறா? நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி மற்றும் ஆனந்தராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வின் ‘பிரிவு-பி’ பகுதியில், பாடத்திட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி தமிழ் வினாக்கள் இடம்பெறவில்லை என்றும், அதற்குப் பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாகக் கேட்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய குளறுபடிகளால் தகுதியுள்ள பல கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளதால், இந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டுப் புதியத் தேர்வை நடத்த வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதியரசர் பி.புகழேந்தி அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்வு முடிவுகள் வெளியிடும்போது ஒவ்வொரு சமூகப் பிரிவினருக்குமான தனித்தனி கட்-ஆஃப் (Cut-off) மதிப்பெண்களைக் குறிப்பிடாமல், ஒட்டுமொத்த முடிவுகளை மட்டும் வெளியிட்டிருப்பது விதிமீறல் என்று வாதிட்டனர். இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் சில தவறுகள் இருந்ததைக் கண்டறிந்துள்ளதாகவும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட அந்தத் தவறுகளால் தற்போது வெளியிடப்பட்ட முடிவுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஒரு முக்கிய அரசுப் பணியிடத்திற்கான தேர்வு முடிவுகளைத் தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறித் திரும்பப் பெற்றதற்கான பின்னணி மற்றும் அதன் உண்மையான காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவருக்கு நீதியரசர் உத்தரவிட்டார். பாடத்திட்டத்தில் இல்லாத வினாக்கள் கேட்கப்பட்டது மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்படாதது போன்ற புகார்கள் ஆயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Exit mobile version