துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான்பூச்சி திட்டம் துவங்கிய 3-ம் நாளிலேயே அதிர்ச்சி – சுகாதாரம் குறித்து கேள்வி

துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான் பூச்சி: திட்டம் துவங்கிய மூன்றாம் நாளிலேயே அதிர்ச்சி – சுகாதாரம் குறித்து கேள்வி

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 179 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவ
தும் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் நலனுக்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று முன்தினம் முதல் காலை உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, பெரியகுளம் நகராட்சியில் பணியாற்றும் 179 துப்புரவு பணியாளர்களுக்கும் தினசரி காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று பெரியகுளம் வடகரை பகுதி ஐந்தாவது வார்டில் பணியாற்றும் குணம் என்ற பெண் துப்புரவு பணியாளருக்கு வழங்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த உணவை சாப்பிடாமல் அப்படியே குப்பையில் கொட்டியதாக கூறப்படுகிறது.

கரப்பான் பூச்சி இருந்த உணவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை உணவு திட்டம் துவங்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே இவ்வாறு உணவில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், துப்புரவு பணியாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உணவு சமைக்கும் இடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா? உணவின் தரம் குறித்து உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுபோன்ற அலட்சியமான செயல்பாடுகள், அரசு நலத்திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக மாற்றுவதாக துப்புரவு பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி நகரங்களை சுத்தமாக வைத்ததில் துப்புரவு பணியாளர்களின் பங்கு அளப்பரியது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருந்த நேரத்திலும், தினந்தோறும் தெருக்களில் குப்பைகளை அகற்றி சுகாதார பணிகளை இடையறாது மேற்கொண்டவர்கள் இவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தகைய துப்புரவு பணியாளர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம், எந்த தனிப்பட்ட அதிகாரியின் சொந்த நிதியிலிருந்தும் வழங்கப்படுவது அல்ல; இது முழுமையாக தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டமாகும்.

இந்நிலையில், அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாமல் மெத்தனமாக செயல்படுகிறார்களா என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உணவு தயாரிப்பு, போக்குவரத்து மற்றும் விநியோக கட்டங்களில் உரிய கண்காணிப்பு இல்லாததே இந்த சம்பவத்திற்குக் காரணம் என துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, உணவு தயாரிப்பு மையத்தின் சுகாதார நிலையை ஆய்வு செய்து, தரமற்ற உணவு வழங்கப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அறிவித்துள்ள இந்த நலத்திட்டம் பாதுகாப்பாகவும் முறையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version