சன் டிவி குழுமத்தில் பங்குச் சச்சரவு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறனின் சட்ட நோட்டீஸ்

சென்னை :
சன் டிவி குழும பங்குகள் மற்றும் சொத்துகள் தொடர்பாக, குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்ட ஏழு பேருக்கு, திமுக எம்.பியும், கலாநிதியின் சகோதரருமான தயாநிதி மாறன் சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ManiControl.com செய்தி தளம் தெரிவித்துள்ளது.

இந்த நோட்டீஸ், 2003ஆம் ஆண்டு Sun TV பங்குகள் விநியோகம் மற்றும் உரிமை மாற்றம் தொடர்பாக பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெற்றதாகக் கூறி, மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது. “லா தர்மா” சட்ட நிறுவனத்தின் வழியாக வழக்கறிஞர் சுரேஷ் மூலமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முக்கிய குற்றச்சாட்டுகள்:

தனிநபர் ஆதாயத்துக்காக மோசடி: கலாநிதி மாறன் Sun TV குழுமத்தின் சொத்துக்களையும் பங்குகளையும் தனக்கென கைப்பற்ற திட்டமிட்டு செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முரசொலி மாறன் இறப்பின் பின்னணியில் சட்டவிரோத நடவடிக்கைகள்: அவரின் இறப்பு நேரத்தில் குடும்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி பங்கு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

பொய்யான ஆவணங்கள் மூலம் சொத்துகள் மாற்றம்: தாயார் மல்லிகா மாறன் பெயரில் சட்ட ஆவணங்கள் இன்றி சொத்துகள் மாற்றப்பட்டதுடன், இறப்புச் சான்றிதழ் வருவதற்கு முன்பே சொத்து உரிமை மாற்றம் நடைபெற்றது.

நம்பிக்கை துரோகம் மற்றும் பங்குகளின் சட்டவிரோத மாற்றம்: 12 லட்சம் பங்குகள் 2003ல் கலாநிதியின் பெயருக்கு எந்தவித ஒப்புதலும் இல்லாமல் மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும் நிதி மோசடி: ரூ.1.20 கோடிக்கு வாங்கப்பட்ட பங்குகளின் மதிப்பு பின்னர் ரூ.3,500 கோடியாக உயர்ந்ததாகவும், இதன் மூலம் ரூ.3,498.80 கோடி மோசடியானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்குத் திருப்பி வழங்கல் மற்றும் உரிமை மாற்றம்: கலாநிதி மற்றும் காவேரி கலாநிதி, பெற்ற டிவிடெண்ட்கள், சொத்துகள், வருமானங்களை முரசொலி மாறன் வாரிசுகளுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கைகள் எதிரொலி :

தயாநிதி மாறன், பங்குகள் மற்றும் சொத்துகள் மீதான உரிமைகளை 2003 முன்னர் நிலைபோலவே மீட்டமைக்க வேண்டும் என்றும், முரசொலி மாறன் வாரிசுகளுக்கே உரிமைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அரசு அமைப்பான சீரியல் பிராட் இன்வெஸ்டிகேஷன் ஆபிஸ் (SFIO) விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முதல் முறை அல்ல. 2024 அக்டோபர் 7-ஆம் தேதி, கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் சட்ட நோட்டீஸ் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது

Exit mobile version