பாலியல் வன்கொடுமை – கைதான 3 பேருக்கு கூலிப்படையுடன் தொடர்பா ? காவல் ஆணையர் விளக்கம்!

கோவை :
கோவையில் கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூன்று பேருக்கும் கூலிப்படையுடன் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர், கோவையில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்வி கற்கும் அந்த மாணவி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில், ஒண்டிப்புதூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளார்.

அவர்கள் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிரிந்தாவன் நகர் பகுதியில் இரவு 11 மணியளவில் காரை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் அவர்களை காரிலிருந்து வெளியே வர கூறியுள்ளனர். பின்னர் ஆண் நண்பரை தாக்கி, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு சிறப்புப்படைகள் அமைத்து விரைவாக விசாரணை தொடங்கிய காவல்துறையினர், குற்றவாளிகள் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரையும் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியதாவது: “கைதான மூவரும் உறவினர்கள். இருகூரில் தங்கி, கிடைத்த வேலையை செய்து வந்தவர்கள். சம்பவத்தன்று மது போதையில், கோவில்பாளையம் பகுதியில் திருடிய இருசக்கர வாகனத்தில் வந்து குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். அதுவரை கைதானவர்களின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், “கைதானவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல” என்றும் காவல் ஆணையர் தெளிவுபடுத்தினார்.

Exit mobile version