கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புஞ்சை கடம்பங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி நேரில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். ஒரே நாளில் 21 இடங்களில் நடைபெற்ற இந்த முகாம்கள் மூலம் நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கைக்காக அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
புஞ்சை கடம்பங்குறிச்சி மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்ச்சிக்குச் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ தலைமை வகித்தார். இந்த முகாமில் கல்வி உதவித்தொகை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உயர்தர மருத்துவச் சிகிச்சை போன்ற தனிநபர் கோரிக்கைகள் அதிகளவில் முன்வைக்கப்பட்டன. மேலும், அந்தந்தப் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம், முறையான சாக்கடை கால்வாய் வசதி மற்றும் சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட செந்தில்பாலாஜி, ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து, “பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உரியத் துறையினருக்கு அனுப்பப்பட்டு, விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, தி.மு.க. அரசின் கடந்த ஐந்து ஆண்டுகால சாதனைகள், குறிப்பாக மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்கள் குறித்துப் பொதுமக்களிடம் விரிவாக எடுத்துக் கூறினார்.
மேட்டுப்பாளையத்தைத் தொடர்ந்து, ஓட்டக்களம், கடம்பங்குறிச்சி அக்ரஹாரம், கடம்பங்குறிச்சி ஏ.டி. தெரு, பொன்னி நகர், கோரைக்காடு, சின்ன வரப்பாளையம், பெரிய வரப்பாளையம், பால்வார்பட்டி, பண்டுதகாரன்புதூர், நன்னியூர், செவந்திபாளையம், பாரதி நகர், கோவில்பாளையம், என்.குளத்தூர், கோட்டைமேடு ஏ.டி. தெரு, வாங்கல் கோட்டை மேடு உள்ளிட்ட சுமார் 21 இடங்களில் அவர் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு மனுக்களைப் பெற்றார்.
இந்த நிகழ்வில் கரூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வேலுசாமி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், முக்கியக் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். மக்கள் பிரதிநிதி நேரடியாகத் தங்களின் இடத்திற்கே வந்து குறைகளைக் கேட்பது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது













