திண்டுக்கல் :
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வழியை உருவாக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார் செங்கோட்டையன். அதிமுக ஒன்றுபட வேண்டுமென தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் பரப்புரை பயணத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடைபெற்றது.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த தனியார் ஹோட்டலில் மோப்ப நாய்கள் மூலம் கடும் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. அவரைச் சந்திக்க வந்த அனைவரும் முழுமையான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.














