சென்னை : திரையுலகில் பலர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர்” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதுடன், இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் விருப்பமின்றி இருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் சீமான் கூறியதாவது :
முருகனை தொடுவது ஒரு அரசியல் நடவடிக்கையாகவே உள்ளது. ஆன்மிகம், முருகன் மாநாடு, பக்தர்களின் மாநாடு என்று அழைத்தாலும், அதன் பின்னணியில் அரசியல் உள்ளதே. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும்போது இந்த மாநாட்டை நடத்துவதற்கான நோக்கம் என்ன ? இதே மாநாட்டை அடுத்த ஆண்டும் நடத்துவார்களா? ஆண்டுதோறும் நடத்தினால் அதுவே ஆன்மிகம்; ஆனால் ஓட்டுக்கு பயனில்லை என்றால் விலகிவிடுவார்கள். அப்போது நம்மால் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும், என்றார்.
மேலும் விவசாயிகள் அனுபவிக்கும் வலியையும் துயரத்தையும் அரசியல்வாதிகள் மதிப்பதில்லை. வெள்ள பாதிப்புகள், இயற்கை பேரழிவுகள் ஏற்படும் போதும், அரசாங்கத்தின் ஆதரவை பெற மக்கள் சாலைகளில் போராட வேண்டியுள்ளது. தங்கள் உரிமைக்காக போராடுகிற மக்களை அரங்கில் பாராட்டுவதற்கு பதிலாக, மறு தேர்தலில் மீண்டும் அதே ஆட்சியாளர்களுக்கே ஓட்டு போடுகிறோம். இதுவே மிகப்பெரிய தவறு. இனியாவது விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும், என அவர் தெரிவித்தார்.
திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு :
ஸ்ரீகாந்த் பாவம். எனக்கு தெரிந்து, திரையுலகில் நிறைய பேர் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர். புகழ் பெற்றவர்கள் பயன்படுத்துகின்றனர். அவர் சிக்கிகொண்டார். அவருக்காக நான் வருத்தப்படுகின்றேன். ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போதை பொருள் வராது. நீண்ட நாட்களாக இருக்கிறது. நாடெங்கும் இருக்கிறது. திரையுலகில் மட்டும் அல்ல. பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று விட்டது. வழிபாட்டு தலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. அரசு நினைத்தால் போதைப் பொருள் ஒழிந்துவிடும்.
ஸ்ரீகாந்த் புகழ்பெற்ற நடிகர் என்பதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் கைதாகவில்லை என்றால் விற்பனை தொடரும். ஆட்சியாளர்கள் நினைக்க வேண்டும். ஆனால், நினைக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.