நியூடெல்லி : இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வுத்துறையினருக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டின் பேரில், சிஆர்பிஎஃப் வீரர் மோதி ராம் ஜாட் கைது செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தேசிய பாதுகாப்பு அமைப்பான என்ஐஏ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை தீவிரமாக அழித்து வருகின்ற நிலையில், சிலர் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உளவுத்துறை தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த 3 வாரங்களில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ராவும் அடங்குகிறார்.
இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, ஹரியானாவைச் சேர்ந்த மோதி ராம் ஜாட், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து ராணுவம் தொடர்பான முக்கியமான ரகசியங்களை பகிர்ந்துள்ளார் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக பல வழிகளில் பணம் பெற்றதாகவும், தொடர்புடைய ஆதாரங்களை என்ஐஏ கைப்பற்றியுள்ளது.
தற்போது மோதி ராம் ஜாட்டை டெல்லியில் கைது செய்து, விசாரணை நடந்து வருகிறது. மேலும், ஜூன் மாதம் வரை விசாரணை தொடர, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த சம்பவம், நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் தீவிரமாகச் செயல்பட வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.