திருவாரூரில் ஊதிய உயர்வு வழங்க கோரி ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 70 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைத்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழிற் பயிற்சி, வங்கி கடன் வசதி மற்றும் அனைத்து அரசு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கு மூலம் வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜபிரியா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் மாலா, பொருளாளர் மோகனாம்பாள், இணை செயலாளர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version