மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் பகுதிகளில் இயங்கும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சிறப்பு ஆய்வு முகாம் நேற்று முன்தினம் அன்னூர் கே.ஜி. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதலின்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் தலைமையில் இந்த அதிரடித் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 84 பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, அவற்றில் இடம்பெற வேண்டிய 21 வகையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்தனர்.
இந்த ஆய்வின் போது, வாகனங்களில் முதலுதவி பெட்டி முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, அவசரகால கதவுகள் (Emergency Exit) தடையின்றிச் செயல்படுகின்றனவா, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் இணைக்கப்பட்டுள்ளனவா என்பது சரிபார்க்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி வாகனத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தலா இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், வாகன ஓட்டுநர்களிடம் பேசிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், “ஒவ்வொரு நாளும் வாகனத்தை எடுக்கும் முன்பு டயர்களில் காற்றின் அழுத்தம், ஆயிலின் அளவு மற்றும் ரேடியேட்டரில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு அவசரகால கதவைத் திறக்கும் முறையைச் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என அறிவுறுத்தினார்.
விபத்து காலங்களில் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தும் விதம் குறித்தும், கதவுகள் வழியாக வெளியேற முடியாத இக்கட்டான சூழலில், வாகனத்தின் உட்புறம் வைக்கப்பட்டுள்ள சுத்தியலைப் பயன்படுத்தி கண்ணாடியை உடைத்து வெளியேறுவது குறித்தும் ஓட்டுநர்களுக்குச் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. “அதிக வேகமே பெரும்பாலான விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக உள்ளது; எனவே வேகக்கட்டுப்பாட்டை மீறக்கூடாது. இரவு நேரங்களில் எதிரில் வாகனங்கள் வராதபோது மட்டுமே ‘ஹை-பீம்’ (High Beam) விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்” என ஓட்டுநர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வின் இறுதியில் ஓட்டுநர்கள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். முறையான பராமரிப்பு இல்லாத வாகனங்களுக்குக் குறைபாடுகளைச் சரிசெய்ய காலக்கெடு வழங்கப்பட்டது.

















