ஹைதராபாத் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், தனது 29வது வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு தனது டி20 சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய பூரன், இதுவரை 106 டி20 போட்டிகளில் விளையாடி, 2275 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதங்கள், அதிகபட்சமாக 98 ரன்கள் மற்றும் 149 சிக்சர்களுடன், அதிக சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அதேசமயம், டக் அவுட் ஆகாமல் தொடர்ந்து 71 இன்னிங்ஸ்கள் விளையாடிய சாதனையும் இவருக்கே சொந்தம்.
மேலும், 53 கேட்ச் பிடித்து டி20 சர்வதேச போட்டிகளில் அதிக கேட்ச்கள் எடுத்த வீரர்களில் 8வது இடத்தில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் (106) விளையாடியவராகவும் பூரன் உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 61 ஆட்டங்களில் 1983 ரன்கள் குவித்து 39.66 என்ற சராசரியை பெற்றுள்ள பூரன், ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்து தொடரை முன்னிட்டு பூரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“நீண்ட யோசனைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். மெரூன் ஜெர்ஸியை அணிந்து களமிறங்கிய ஒவ்வொரு தருணமும் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருந்தது என் வாழ்நாளில் மிகப்பெரிய பெருமை,”
என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன், ரசிகர்கள், குடும்பத்தினர், அணியினர் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர்,
“எப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் எனது அன்பு தொடரும்; அணி எதிர்காலத்தில் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்றும்,”
கூறியுள்ளார்.
இவரது அறிவிப்பு, சமீபத்தில் ஓய்வை அறிவித்த மற்ற வீரர்களுடன் சேர்ந்தபோது மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகினர். ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வேல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தென் ஆப்பிரிக்காவின் ஹெய்ன்ரிச் கிளாசன் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்தார்.