தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் முயற்சியாக, மாநில அளவிலான உயர்மட்டக்குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துருக்களின் அடிப்படையில், அதிக குக்கிராமங்கள் மற்றும் மக்கள் தொகை கொண்ட 17 கிராம ஊராட்சிகள், தற்போது 37 புதிய ஊராட்சிகளாகப் பிரிக்கப்பட்டு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் நிர்வாக வசதி மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்மட்டக் குழு, பல்வேறு விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டது. இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் பரிசீலிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள் தொகை மற்றும் பரப்பளவு போன்ற காரணிகளைக் கொண்டு இந்த சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதுார் ஊராட்சியில், 9குக்கிராமங்கள் உள்ளன. திவான்சாபுதுார் – 5, கணபதிபாளையம் – 4 குக்கிராமங்களைகொண்டதாகவும்; அன்னுார் ஊராட்சி ஒன்றியம் மசக்கவுண்டன் செட்டிபாளையம் கிராம ஊராட்சியில் 7குக்கிராமங்கள் உள்ளன. அதில், மசக்கவுண்டன் செட்டிபாளையம் – 4; ஒரைக்கால்பாளையம் – 3 குக்கிராமங்களுடன் பிரிக்கப்பட்டன. * கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருநாவலுார் ஊராட்சி ஒன்றியம் சேந்தமங்கலம் கிராம ஊராட்சி, 16 குக்கிராமங்களை உள்ளடக்கியது. அதில், சேந்தமங்கம் – 3, மைலங்குப்பம் – 4, பெரியமாரனோடை – 3, பெரிய குப்பம் – 4, சின்னகுப்பம் (பாதுார் ஊராட்சி) – 2குக்கிராமங்கள் என, ஐந்து ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடவூர் கிராம ஊராட்சி, 34 குக்கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இது, இடையப்பட்டி கிழக்கு – 23, கடவூர் மேற்கு – 11 குக்கிராமங்கள், என இரண்டாக பிரிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி, நான்கு குக்கிராமங்களை உள்ளடக்கியது. கல்லல் வடக்கு – மூன்று, கல்லல் தெற்கு – 1 குக்கிராமங்களுடன் இரு ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், ம ணப்பாறை ஊராட்சி ஒன்றியம் புத்தாநந்தம் ஊராட்சி, 21 குக்கிராமங்களை உள்ளடக்கியது. கிராம ஊராட்சியை, புத்தாநத்தம் – 9, இடையப்பட்டி – 12 குக்கிராமங்களுடன் இரண்டாக பிரிக்கப் பட்டுள்ளது. கண்ணுடையான்பட்டி கிராம ஊராட்சி, 24 குக்கிராமங்களை கொண்டது. கண்ணுடையான்பட்டி – 12, முத்தபுடையான்பட்டி – 12 என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராம ஊராட்சி, எட்டு குக்கிராமங்களை கொண்டது. கிருஷ்ணசமுத்திரம் – 7, செம்மங்குளம் – 1 குக்கிராமம் என இரு ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டது.
மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் இனாம் குளத்துார் கிராம ஊராட்சி, 11 குக்கிராமங்களை கொண்டது. ஆலம்பட்டி புதுார் – 9, இனாம்குளத்துார் – 2 குக்கிராமங்கள் கொண்டதாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட் டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், சித்தரேவு கிராம ஊராட்சி, 16 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இதில், சித்தரேவு – 7, சிங்கார கோட்டை – 9 குக்கிராமங்கள் கொண்டதாக பிரிக்கப்பட்டது. குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் ஆர்.கோம்பை கிராம ஊராட்சி, 35 குக்கிராமங்களை உள்ளடக்கியது. அதில், ஆர்.கோம்பை – 18; சின்னழகு நாயக்கனுார் – 17 குக்கிராமங்கள் என பிரிக்கப்பட்டது. இந்த மறுசீரமைப்பின் மூலம், அதிக குக்கிராமங்களைக் கொண்டிருந்த பெரிய ஊராட்சிகள், சிறிய மற்றும் நிர்வாகரீதியாகக் கையாள எளிதான அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால்: கிராம மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் நிர்வாக அணுகல் எளிதாகும்.சிறிய ஊராட்சிகள் உருவாவதால், உள்ளூர் மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஊராட்சி நிதி மற்றும் அரசின் மானியங்களைச் சரியாகப் பிரித்துச் செலவு செய்வதில் அதிக கவனம் செலுத்த முடியும். புதிதாகப் பிரிக்கப்பட்ட இந்த ஊராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைமுறைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
