முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய பிரபல விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்

திருவனந்தபுரம், ஜூன் 16 – இந்தியாவின் விண்வெளித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த மூத்த விஞ்ஞானி நெல்லை முத்து இன்று திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

1951-ம் ஆண்டு மே 10-ம் தேதி திருநெல்வேலியில் பிறந்த நெல்லை முத்து, வேதியியல் துறையில் இளநிலை பட்டம் பெற்று, இந்திய விண்வெளித் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றியவர்.

1963 முதல் 1980 வரை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. டாக்டர் கலாம் இஸ்ரோவில் திட்ட இயக்குநராக இருந்த காலகட்டத்தில், நெல்லை முத்து 1973-ல் விஞ்ஞானியாக சேர்ந்தார். பின்னர் டி.ஆர்.டி.ஓ.வில் கலாம் பணியாற்ற தொடங்கிய பிறகும், இருவரும் தொடர்ந்த தொடர்பில் இருந்தனர்.

அப்துல் கலாமை பற்றிய நான்கு நூல்களை எழுதி, மொழிபெயர்த்துள்ளார். அறிவியல், சிறுவர் இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு உள்ளிட்ட பலதுறைகளில் 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது நான்கு நூல்களுக்கு தமிழக அரசின் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மலேசியாவில் உள்ள உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை இவருக்கு ‘கவிமாமணி’ விருதும் வழங்கியுள்ளது.

நெல்லை முத்துவின் உடல் திருவனந்தபுரத்திலிருந்து மதுரையில் உள்ள அவரது மகள் டாக்டர் கலைவாணியின் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மூத்த விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version