“ரங்கா… கோவிந்தா…” முழக்கம் விண்ணைப் பிளக்க காரமடை அரங்கநாதர் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு!

கொங்கு மண்டலத்தின் மிகப்பழைமையான மற்றும் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான கோவை மாவட்டம் காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டுக்கான மாசி மகத் தேர்த்திருவிழா பக்திப் பரவசத்துடன் அரங்கேறியது. விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று மாலை மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் திரண்டு வந்த லட்சக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா முழக்கமிட்டுத் தேரை வடம் பிடித்து இழுத்துத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. விழா நாட்களின் போது தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய அங்கமாக நேற்று முன்தினம் அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அரங்கநாத பெருமாளுக்குத் திருக்கல்யாண உற்சவம் சாஸ்திர முறைப்படி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு யானை வாகன உற்சவமும் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று அதிகாலை சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மலர்களாலும் வண்ணத் துணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார். மாலை 4.30 மணியளவில் கோயில் ஸ்தலத்தார், சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் தேருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து தீபாராதனை காட்டினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் முக்கியப் பிரமுகர்கள் தேரை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தனர். “ரங்கா… கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணைப் பிளக்க, தாசர்களின் சங்கு மற்றும் சேகண்டி ஒலிகளுக்கிடையே தேர் ரத வீதிகளில் அசைந்தாடி வந்தது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வாழைப்பழங்களைத் தேரின் மீது வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், மேட்டுப்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் முன்னிலையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்திச் சமூக விரோதிகள் எவ்வித அசம்பாவிதங்களிலும் ஈடுபடாமல் இருக்கச் சாதாரண உடையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேரோடும் வீதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் அன்னதானக் கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோயில் வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலையாகக் கண்காணிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.

Exit mobile version