ஜெய்ப்பூர் – 2025 ஐபிஎல் சீசனில் ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்புகளை இழந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமான தோல்வியை சந்தித்தது. ஹெட்மயர் மீதான நம்பிக்கையை தொடர்ந்து வைத்த ராஜஸ்தான் ரசிகர்கள், இப்போது அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் 34 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பஞ்சாப், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (30), நேஹல் வதேரா (70), ஷஷாங் சிங் மற்றும் அஸ்மதுல்லா ஆகியோரின் அதிரடி பேட்டிங்கில் 20 ஓவரில் 219 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான், தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் (50) மற்றும் இளம் வீரர் சூர்யவன்ஷி (40) அதிரடியாக ஆடியதைத் தொடர்ந்து, சக்திவாய்ந்த தொடக்கம் கிடைத்தது. ஆட்டத்தின் ஆறாவது ஓவரிலேயே 89 ரன்களை கடந்த ராஜஸ்தான், ஒரு கட்டத்தில் வெற்றிக்கு நெருக்கமாக இருந்தது.
இருப்பினும், ஹர்ப்ரீத் ப்ரார் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மத்திய வரிசை வீரர்கள் சாம்சன், ரியான் பராக் ஆகியோர் விரைவாக வெளியேறியதால் ரன்னிங் ஸ்கோர் சீரழிந்தது.
துருவ் ஜுரல் (அரைசதம்) போராடிய போதும், ஹெட்மயரின் மந்தமான ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. ஃபினிஷராக களமிறங்கிய ஹெட்மயர், 12 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்ததால், கடைசி ஓவர்களில் தேவையான வேகத்தில் ரன்கள் சேரவில்லை. இதனால் ராஜஸ்தான் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் ரசிகர்களின் ஏமாற்றம்
இது இந்த சீசனில் ராஜஸ்தானுக்கான 10வது தோல்வி. இதில் 5 தோல்விகள் 11 ரன்களுக்கும் குறைவான வித்தியாசத்தில் வந்தவை. ரசிகர்கள், “ஹெட்மயரை ஃபினிஷர் என நம்பின ராஜஸ்தான் அணி, ஜோஸ் பட்லரை இழந்ததே பெரிய பிழை,” எனவேதனை தெரிவித்து வருகின்றனர். “பட்லர் இருந்திருந்தால், ராஜஸ்தான் இன்று டாப் 4-இல் இருக்கும்,” என்ற வருத்தமும் பதிவாகியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆட்டநாயகனாக, முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ப்ரீத் ப்ரார் தேர்ந்தெடுக்கப்பட்டார்