தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், இன்று தமிழகம் முழுவதும் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு தற்போது எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

















