மாவட்டத் தலைநகரான சிவகங்கையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியான ரயில்வே கிராசிங் பாலப் பணிகள், ரயில்வே துறையின் தாமதமான ஒப்புதல் காரணமாகக் கிடப்பில் போடப்பட்டதால், அப்பணிகளை விரைந்து முடித்து பாலத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிவகங்கை நகரின் வழியே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இரண்டு புறவழிச்சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட ஒரு புறவழிச்சாலை (திருப்புத்தூர் சாலை மற்றும் மானாமதுரை சாலையை இணைக்கும் வகையில் பெருமாள்பட்டியில் இருந்து சாமியார்பட்டி வரை) பயன்பாட்டில் உள்ளது.
இரண்டாவது புறவழிச்சாலையான திருப்புத்தூர் சாலையில் உள்ள காஞ்சிரங்காலில் இருந்து மானாமதுரை சாலையில் உள்ள வாணியங்குடி வரை சாலை அமைக்கும் பணி மட்டும் நீண்ட காலமாகத் துவங்கப்படாமல் இருந்தது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்தச் சாலை, சுமார் 10.6 கி.மீ நீளமுடையதாகும். இச்சாலை சூரக்குளம், கீழக்கண்டனி ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து செல்கிறது. இச்சாலையின் பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், காஞ்சிரங்கல் ஊராட்சிப் பகுதியில் இருந்து மொத்தம் 10.6 கி.மீ தூரத்திற்குப் புறவழிச்சாலை அமைக்க ரூ. 109.51 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டது. முதற்கட்டமாக, மொத்தம் 7 கி.மீ தொலைவிற்கு ரூ. 77.16 கோடியில் சாலை அமைக்கும் பணி கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. காஞ்சிரங்காலில் இருந்து தொண்டி சாலை இணைப்பு, பழமலை நகர், ஆயுதப்படை குடியிருப்பு வழி இளையான்குடி சாலை இணைப்பு வரை சாலைப் பணிகள் முடிவடைந்து விட்டன.
ஆனால், இந்தப் புறவழிச்சாலையின் முக்கியமான பகுதியான காஞ்சிரங்கால் ரயில்வே கிராசிங்கில் உள்ள பாலப் பணிகள் மட்டும் தண்டவாளங்களுக்கு மேல் செல்லும் பகுதியில் நடைபெறவில்லை. மற்ற பகுதிகளில் பாலப் பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே முடிவடைந்து விட்டன. மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தூரத்திற்கு மட்டும் பாலப் பணிகள் முடிவடைந்த நிலையில், தண்டவாளங்களுக்கு மேல்புறம் பாலம் அமைக்க ரயில்வே துறையின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே பணி துவங்குவதில் காலதாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போதுதான் பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாலம் துவங்கும் இடம் வரை மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கூறுகையில், ரயில்வே துறை ஒப்புதல் வழங்க தாமதம் செய்ததால் தான் ரூ. 109.51 கோடி செலவில் தற்போது சாலை அமைத்தும் அது முழுமையாகப் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். மேலும், இந்தப் பிரச்னையால் தொடர்ந்து விபத்துகளும் நடந்து வருகின்றன என்று வேதனை தெரிவித்தனர். எனவே, தண்டவாளத்திற்கு மேல் செல்லும் பகுதியில் பாலப் பணிகளை விரைந்து முடித்து, புறவழிச்சாலையை முழுமையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

















