மயிலாடுதுறை சேந்தங்குடியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது பட்டா வழங்குவதாக வருவாய்துறையினர் உத்திரவாதம் அளித்தும் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு;-
மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடி பகுதியை சேர்ந்த 134 குடும்பத்தினர் தங்கள் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். ஆனால், மேம்பாலத்துக்கு கீழ் வசித்த 14 குடும்பத்தினருக்கு தங்கள் பகுதியில் பட்டா வழங்கியபோது தங்களுக்கு பட்டா வழங்கிவிட்டு, அதன்பிறகு மற்றவர்களுக்கு வழங்குங்கள் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதே பகுதியில் மற்றொரு இடத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்குவதாக வருவாய்துறையினர் உறுதியளித்தனர். வருவாய்துறை குறிப்பிட்ட இடத்தில் உள்ள அடர்ந்த காடுகளை ரூபாய் 70 ஆயிரம் மதிப்பில் கிராமமக்கள் சுத்தம் செய்து 6 மாதங்களை கடந்தும் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்த அப்பகுதி மக்கள், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக அந்த இடத்தில் தங்களுக்கு பட்டா வழங்ககோரி கடந்த 20 நாட்களுக்கு முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அறிவிக்கும் முன் பட்டா வழங்க 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக வருவாய்துறையினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் பட்டா வழங்காமல் தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்குவதாக தற்போது கூறி ஏமாற்றுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள் நீலப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கபிலன் தலைமையில் தாங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள இடத்தில், டென்ட் அமைத்து இன்று மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவிலும் போக்கஸ் லைட் கட்டி காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பட்டா வழங்கவில்லை என்றால் தேர்தலில் வாக்கு செலுத்தாமல் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர்.
