அகமதாபாத்தில் பயங்கர விமான விபத்து : பிரதமர் மோடி நேரில் பார்வை

அகமதாபாத் :
லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அகமதாபாத்தில் பயங்கர விபத்திற்குள்ளானது. இதில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, இன்று அகமதாபாத்திற்கு சென்று, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி இன்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 230 பயணிகள், விமானி சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர் மற்றும் 10 பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.

விமானி சுமித் சபர்வால் 8200 மணி நேரம் விமானம் இயக்கிய அனுபவமுடையவரும், துணை விமானி கிளைவ் குந்தர் 1100 மணி நேர அனுபவமுடையவரும் ஆவார். பயணிகள் அனைவரும் இந்தியர்கள், பிரிட்டனர்கள், போர்ச்சுகீசியர்கள், கனடாவை சேர்ந்தவர்கள் எனும் பன்னாட்டுப் பின்னணியிலிருந்தனர்.

விமானம் புறப்பட்ட சில நொடிகளில் மேலே எழுவதில் சிக்கல் ஏற்பட்டு, 425 அடி உயரம் எட்டியதும் சிக்னல் அறுந்துவிட்டது. பின்னர் 625 அடி உயரத்திலிருந்து, மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது தலைகீழாக விழுந்து வெடித்துச் சிதறியது.

அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா தெரிவித்த தகவலின்படி, விபத்தில் ஒரே ஒரு பயணி விஷ்வாஸ் குமார் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். இந்த பயங்கரச் சம்பவத்தில் காயமடைந்த ஒரே நபரையும் பிரதமர் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏற்கனவே அகமதாபாத்தில் உள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவர் கூறியதாவது :

“அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனம் நொறுகியது. இந்த சோகமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியே எனது எண்ணங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவுவதற்காக அமைச்சர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறேன்.”

இந்த விபத்து நாட்டை முழுவதுமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விமான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் ஒரு முறை கேள்விகள் எழுந்துள்ளன.

Exit mobile version