அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் உள்ள லாஸ் வெகாஸ் நகரில் நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மிகுந்த கவனம் பெற்ற வெற்றியை பெற்றுள்ளார்.
இறுதி சுற்றுகளில், 19 வயதான பிரக்ஞானந்தா, நார்வேவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரர் மற்றும் ஐந்து முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை எதிர்த்து வெள்ளை நிற காயுடன் ஆடியார். வெறும் 39 நகர்த்தல்களில் கார்ல்சனை அதிரடியாக வீழ்த்திய பிரக்ஞானந்தா, தன்னை உலகளாவிய அளவில் மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.
இந்த வெற்றியின் மூலம், கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிலிட்ஸ் என மூன்று வடிவங்களிலும் கார்ல்சனை தோற்கடித்த வீரராகும் சிறப்பை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். மேலும், இந்த வெற்றியின் மூலம், காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
முந்தைய பாரிஸ் செஸ் போட்டியில் ஒன்பதாவது இடத்தில் முடித்திருந்ததால் ஏமாற்றம் ஏற்பட்டிருந்த பிரக்ஞானந்தாவுக்கு, இந்த வெற்றி மிகுந்த நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது.
தற்போது, ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ‘குரூப் ஒயிட்’ பிரிவில், 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து, அடுத்த சுற்றுகளுக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளார்.