நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு வரத்து அதகரித்துள்ள நிலையில், வெளிச்சந்தையில் கிராக்கி குறைந்ததால் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உருளைக்கிழங்கு குறைந்த விலைக்கு ஏலம் போனது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், ஏலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் – நெல்லித்துறை சாலையில் கடந்த 1935 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் (Nilgiris Cooperative Marketing Society) 618 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு குன்னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் ஊழியர்களால் தரம் பிரிக்கப்பட்டு, 45 கிலோ கொண்ட மூட்டைகளாகக் கட்டி, அதன் தரத்திற்கு ஏற்ப வியாபாரிகள் ஏல முறையில் வாங்கிச் செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இச்சங்கத்திற்குக் கொண்டு வரப்பட்ட 22 லோடுகள் (சுமார் 198 டன்) உருளைக்கிழங்கு, 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ. 1880 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 1000 வரையிலும் விற்பனையானது. ஆனால், நேற்று (டிசம்பர் 9, 2025) நடைபெற்ற ஏலத்தின்போது, நீலகிரி மாவட்ட விவசாயிகள் மொத்தமாக 34 லோடுகள் (சுமார் 306 டன்) உருளைக்கிழங்குகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். அப்போது நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ. 1440க்கும், குறைந்தபட்சமாக ரூ. 1060க்கும் மட்டுமே விலை கிடைத்தது. முந்தைய நாளை விட அதிகபட்ச விலை ரூ. 440 குறைந்ததால், தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சங்க அதிகாரிகளுடன் உடனடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (Minimum Support Price) வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்ததால், ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கூட்டுறவு சங்கச் சார்பதிவாளரும், மேலாளருமான நிசார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், நீலகிரி மாவட்டத்தில் தற்போது அதிக விளைச்சல் காரணமாக மேட்டுப்பாளையம் சங்கத்திற்கு உருளைக்கிழங்கின் வரத்து அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். இதேபோல், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மூலமாக வெளி உருளைக்கிழங்கு மண்டிகளுக்கும் சுமார் 70 லோடுகள் (சுமார் 630 டன்) உருளைக்கிழங்கு வரத்து உள்ளது. இங்கிருந்து உருளைக்கிழங்குகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அவற்றை அண்டை மாவட்டமான கேரளாவிற்கும், மேலும் இலங்கை, மாலத்தீவு, துபாய், பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். தற்போது இலங்கையில் வெள்ளப் பாதிப்பு மற்றும் கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊட்டி உருளைக்கிழங்கிற்கு வெளிச்சந்தையில் கிராக்கி குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக, ஏலத்தில் கலந்துகொள்ள வியாபாரிகள் அதிகமாக ஆர்வம் காட்டாததால், உருளைக்கிழங்கு குறைந்த விலைக்கு விற்பனையாகிறது என்றும் அவர் விளக்கினார். இதையடுத்து, ஒரு நாள் தாமதமாக இன்று (டிசம்பர் 10) ஏலத்தை நடத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.














