தமிழகத்தின் முக்கிய வணிகத் தலமாகவும், கேரளா மற்றும் பிற மாவட்டங்களை இணைக்கும் நுழைவு வாயிலாகவும் திகழும் பொள்ளாச்சி நகரில், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நகரை அழகுபடுத்தவும் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் பணிகள் புதிய வேகமெடுத்துள்ளன. நகரின் முக்கியச் சந்திப்புகளில் உள்ள 8 ரவுண்டானாக்களை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து, பாரம்பரியச் சிலைகள் மற்றும் பசுமைத் தாவரங்களுடன் அழகுபடுத்தும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பொள்ளாச்சி வழியாகக் கேரளா மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு உடுமலை ரோடு மரப்பேட்டையில் தொடங்கி பஸ் நிலையம், காந்தி சிலை வழியாகப் பல்லடம் ரோடு வரை ரூ.52 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, விபத்துகளைத் தவிர்க்கவும் வாகனங்கள் தடையின்றிச் செல்லவும் கோவை ரோடு, நியூ ஸ்கீம் ரோடு சந்திப்பு, தேர்நிலை மற்றும் பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டன.
தற்போது, இந்தப் போக்குவரத்துச் சந்திப்புகளை வெறும் சிமெண்ட் கட்டுமானங்களாகத் தவிக்காமல், பொள்ளாச்சியின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இடங்களாக மாற்ற நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.25 லட்சம் நிதியில், முதற்கட்டமாக மையப் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் புற்கள் பதிக்கும் பணிகள் மற்றும் அலங்காரச் செடிகள் நடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்டமாக, காந்தி சிலை, தேர்நிலை, பல்லடம் ரோடு மற்றும் பெரிய பள்ளிவாசல் சந்திப்புகளில் உள்ள ரவுண்டானாக்கள் சீரமைக்கப்பட உள்ளன.
இந்த அழகுபடுத்தும் பணியில், ரவுண்டானாக்களின் மையப்பகுதியில் தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் சிலைகள் நிறுவுதல், சுற்றுச்சுவர்களில் கண்கவர் ஓவியங்கள் வரைதல் மற்றும் இரவு நேரங்களில் ஜொலிக்கும் வகையில் அலங்கார மின்விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “நகரின் முக்கியச் சந்திப்புகளைச் சீரமைப்பதன் மூலம் விபத்துகள் குறைவதோடு, வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்குப் பொள்ளாச்சி ஒரு பசுமையான மற்றும் அழகான நகரமாகத் தோன்றும். இந்த 8 ரவுண்டானாக்களை அழகுபடுத்தும் பணிகளும் இன்னும் சில வாரங்களுக்குள் முழுமையாக நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும்,” எனத் தெரிவித்தனர்.

















