தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி வரும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) நோக்கிப் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வாரிசுகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக்கொண்டனர்.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. இதற்காகத் தலைமை அலுவலகம் வந்த தலைவர் விஜய்க்கு, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் வந்திருந்த முக்கியப் பிரமுகர்கள் விஜயைச் சந்தித்துத் தங்களைக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைப்பு விழாவின் மிக முக்கிய நிகழ்வாக, பெருந்தலைவர் காமராஜரின் வம்சாவளிப் பேத்தி மயூரி கண்ணன் த.வெ.க-வில் இணைந்தது அமைந்தது. முன்னதாக திமுகவில் இருந்த அவர், தற்போது விஜய்யின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். “எந்தப் பொறுப்பையும் எதிர்பார்த்து நான் இங்கு வரவில்லை; விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ஒரு சாதாரணத் தொண்டராகத் துணையாக இருப்பேன்” என மயூரி கண்ணன் உணர்ச்சிப்பொங்கத் தெரிவித்தார்.
அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் கேத்ரின் மற்றும் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தியின் மகனும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வி.ஆர்.ராஜ்மோகன் ஆகியோரும் கட்சியில் இணைந்தனர்.
புதுச்சேரி முன்னாள் ஐ.ஜி. ராமச்சந்திரன், புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, திருவள்ளூர் அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் விஜய்யின் கைகளைப் பலப்படுத்த இணைந்தனர். திமுக தரப்பிலிருந்து தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மற்றும் ஒட்டன்சத்திரம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம் ஆகியோர் த.வெ.க-வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி 23-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ராஜனும் (முன்னாள் காங்கிரஸ் ஆதரவாளர்) நேற்று த.வெ.க-வில் இணைந்தார். திரையுலகைச் சேர்ந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் மற்றும் இயக்குனர் ஜெகதீச பாண்டியன் ஆகியோரும் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்த அனைவரும் தலைவர் விஜய்யுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தமிழகத்தின் முன்னணி கட்சிகளிலிருந்து இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் முக்கிய வாரிசுகள் த.வெ.க-வை நோக்கி வருவது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
















