திண்டுக்கல் மாநகரப் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், கடத்தல்காரர்களைப் பிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டதன்பேரில், நகர் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
போலீசார் பேகம்பூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தியபோது, அங்குள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், பேகம்பூர் சிக்கந்தர் சாகிப் தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரது மகன் முகமதுசெளபான் சேட் (23) என்பவர், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த அரிசி மூட்டைகளை ஒரு கார் மூலம் கேரளாவுக்குக் கடத்திச் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து போலீசார் முகமதுசெளபான் சேட்டை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 1.1/2 டன் (ஒன்றரை டன்) ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்த இருந்த கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த இடத்தில் சோதனையிட்டபோது, கார்களுக்குச் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 6 கேஸ் சிலிண்டர்கள், கேஸ் நிரப்பும் பம்ப் ஆகியவையும் சிக்கின. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட வாலிபரிடம் இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















