மயிலாடுதுறையில் நகரம் முழுவதும் வழிந்தோடும் பாதாள சாக்கடை பிரச்சனையை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக ராமதாஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:-
மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் அணி சார்பில், மயிலாடுதுறை நகரம் முழுவதும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை பிரச்சனையை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பாக்கம் சக்திவேல், தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
மயிலாடுதுறை நகரம் முழுவதும் வழிந்தோடும் பாதாள சாக்கடைப் பிரச்சனையை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்,
பராமரிப்புப் பணியில் சுணக்கம் காட்டும் ஒப்பந்தக்காரர்களை மாற்றி, புதிய ஒப்பந்தக்காரர்களை நியமிக்க வேண்டும்,
அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து தரத்தை மேம்படுத்த வேண்டும்,
கூடுதலான 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் புதிய புறக்காவல் நிலையங்களை அமைக்க வேண்டும்,
இளைஞர்களைச் சீரழிக்கும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைத் தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும்,
மேலும், மணல்மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலவும் ஆசிரியர்களின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், அங்குள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

















