டெல்லி :
தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட புழுதிப்புயலுடன் கூடிய கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன, வாகன ஓட்டம் முடங்கியது, மேலும் விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
புழுதிப் புயலுடன் மணிக்கு 70 முதல் 79 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று மற்றும் ஆலங்கட்டிய மழையால், டெல்லியின் கோல் மார்க்கெட், லோடி உள்ளிட்ட இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தாமதமடைந்தன.
இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் (விமான எண் 6E 2142), புறப்பட்ட சில நேரங்களுக்குப் பிறகு மோசமான வானிலையை எதிர்கொண்டது. நடுவானில் ஆலங்கட்டி மழை நேரத்தில் விமானம் கடுமையாக குலுங்கியது. பயணிகள் தெரிவித்ததின்படி, அவர்கள் அச்சத்துடன் பயணித்தனர்.
விமானியின் உன்னத சாமர்த்தியத்தால், விமானம் 227 பயணிகளுடன் மாலை 6.46 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. ஆனால் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, இண்டிகோ நிறுவனத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.