அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று ஒரு மிகப்பெரிய விமான விபத்து நிகழ்ந்தது. சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (B 787-8 ட்ரீம்லைனர்), புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
மதியம் 1.40 மணியளவில் புறப்பட்ட இந்த விமானம், மேகானி நகர் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி கட்டடத்தின் மேல் மோதியது. இந்தியாவில் இது வரையில் நடந்த மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 14 குழந்தைகள் (12 வயதிற்கு குறைவானவர்கள்) இந்த விமானத்தில் இருந்தனர்.
இந்த கோர விபத்தில் இதுவரை 133 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நேரம் மதிய உணவுக்காலம் என்பதால், விடுதி வளாகத்தில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் பெரும்பாலனோர் அப்போது உணவருந்திக் கொண்டிருந்தனர். விமானம் நேரடியாக சாப்பாட்டுப் பகுதியில் மோதியதால், மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். பாஜகவட்ட தகவலின்படி, தற்போது வரை 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.