ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜனதா அரசையும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று மாலை தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சக்கரை தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது லட்சுமணன் பேசியதாவது, இந்தி திணிப்பு, கல்விக்கு நிதி தர மறுப்பது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது, எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் வாக்குரிமையை பறிப்பது, நூறு நாள் வேலை திட்டத்தை முடக்க நினைப்பது இப்படி பல வகைகளில் மத்திய பா.ஜனதா அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. பட்ஜெட்டில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்காமல் பூஜ்ஜியத்தை கொடுத்துள்ளனர். வரும் தேர்தலில் பா.ஜனதாவுக்கும், அவர்களுக்கு அடிமையாக இருக்கும் அ.தி.மு.க.வுக்கும் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் என்றார்
இதில் தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, உள்பட காங்கிரஸ், விசிக, உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் 700 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்
இதேபோல் விழுப்புரம் மந்தக்கரை, கோலியனூர், பிடாகம், தோகைப்பாடி, வளவனூர், கோட்டக்குப்பம் உள்ளிட்ட 17 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
