“ஓய்வூதியம் என்பது பிச்சை அல்ல, அது எங்கள் உரிமை”: ஜான் போஸ்கோ பிரகாஷ் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் முதுகெலும்பாகத் திகழும் கிராம ஊராட்சி செயலாளர்கள், தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 9-ம் தேதி முதல் மாநில அளவில் மாபெரும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் நிர்வாகப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் தங்களுக்கு, அரசு இழைத்து வரும் தொடர் புறக்கணிப்பைக் கண்டித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 15,900 – 50,490 என்ற சி கிரேடு பணியாளர்களுக்கான கால முறை ஊதியத்தைப் பெற்று வரும் தங்களுக்கு, பணி ஓய்வுக்குப் பின் வெறும் 2,000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுவது தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த 2,000 ரூபாய் ஓய்வூதியம் என்பது பகுதிநேரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியமாகும். ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பணிகளையும் கவனிக்கும் முழு நேரப் பணியாளர்களான தங்களுக்கு, இந்தத் தொகை எவ்விதத்திலும் ஈடாகாது என்றும், இது தங்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி என்றும் ஜான் போஸ்கோ பிரகாஷ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக ஏற்கனவே கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலாளர்கள் சென்னையில் திரண்டு தொடர் விடுப்புப் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது அரசு சுமார் 8 கோடி ரூபாய் வரை ஊதியப் பிடித்தம் செய்த போதிலும், பணியாளர்கள் பின்வாங்கவில்லை. அப்பொழுது ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் என உறுதி அளித்ததாலேயே போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், அரசுத் தரப்பில் அளித்த வாக்குறுதிப்படி 10 நாட்கள் கடந்தும் இதுவரை முறையான அரசாணை வெளியிடப்படவில்லை. அரசின் இந்த மௌனம் ஊராட்சி செயலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, ஒத்திவைக்கப்பட்ட போராட்டத்தை மீண்டும் பிப்ரவரி 9-ம் தேதி முதல் சென்னையில் தொடங்கி, அரசாணை வரும் வரை இடைவிடாது தொடர முடிவெடுத்துள்ளனர். தங்களை உடனடியாகத் தமிழ்நாடு அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் (Assured Pension Scheme) இணைக்க வேண்டும் மற்றும் ஏற்கனவே ஓய்வு பெற்ற முன்னாள் செயலாளர்களுக்கு மாதம் 15,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போர் முரசு கொட்டப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ள இந்தப் போராட்டத்தால், பிப்ரவரி மாதத்தில் ஊராட்சிகளின் நிர்வாகப் பணிகள் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version