திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், விளைநிலங்களுக்குள் புகுந்து மயில்கள் பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கன்னிவாடியில் அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகின்றன. இங்கு யானைகள், காட்டு மாடுகள், கடமான்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் மற்றும் காட்டு மாடுகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், தற்போது மயில்களின் எண்ணிக்கை இப்பகுதிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், அவை கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் பெய்த சாரல் மழையைத் தொடர்ந்து, கன்னிவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆர்வத்துடன் பசுந்தீவன உற்பத்தி மற்றும் மக்காச்சோளச் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மக்காச்சோளச் செடிகள் நன்கு வளர்ந்து, கதிர்கள் பால் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளன. இந்தச் சூழலில், வனப்பகுதியிலிருந்து வெளியேறும் மயில்கள், விளைநிலங்களுக்குள் புகுந்து இளங்கதிர்களைக் கொத்திச் சிதைத்து வருகின்றன. இதனால் செடிகள் முறிந்து விழுந்து வீணாவதோடு, மகசூல் பாதியாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
“கடும் வெயிலுக்குப் பிறகு பெய்த மழையை நம்பி அதிக அளவில் முதலீடு செய்து மக்காச்சோளம் பயிரிட்டுள்ளோம். காட்டு மாடுகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க வேலி அமைத்தாலும், பறந்து வரும் மயில்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. பால் பிடிக்கும் பருவத்தில் கதிர்கள் சேதமடைவதால் எங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது,” என்று இப்பகுதி விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மயில்கள் மற்றும் இதர வன உயிரினங்கள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் அகழிகள் அமைத்தல் அல்லது உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், அடுத்தடுத்த பருவச் சாகுபடியைக் கைவிடும் சூழல் ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

















