மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில், ‘பாஸ்டேக்’ (FASTag) கணக்கில் போதிய பணம் இல்லை என்ற காரணத்தைக் கூறி அரசுப் பேருந்தை ஊழியர்கள் சிறைபிடித்த சம்பவம் நள்ளிரவில் பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் அரசுப் பேருந்து ஊழியர்களுக்கும் சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பயணிகள் சுமார் அரை மணி நேரம் நடுவழியில் தவிக்கும் சூழல் உருவானது.
பெங்களூரு – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, விதிமீறல் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது போன்ற பல்வேறு புகார்களால் ஏற்கனவே சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளுடன் திருமங்கலம் நோக்கி அரசு நகர்ப்பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்து கப்பலூர் சுங்கச்சாவடியை நெருங்கியபோது, அந்த வாகனத்தின் ‘பாஸ்டேக்’ கணக்கை ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது அதில் போதிய இருப்புத் தொகை இல்லை என்று கூறி, தானியங்கி தடுப்புகளைத் திறக்க மறுத்து பேருந்தை அங்கேயே நிறுத்தி வைத்தனர்.
அரசுப் பேருந்து என்பதால் பயணிகளின் நலன் கருதி அனுமதிக்க வேண்டும் என ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கோரிக்கை விடுத்தும், சுங்கச்சாவடி ஊழியர்கள் கறாராக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவு நேரத்தில் கைக்குழந்தைகளுடனும், முதியவர்களுடனும் பயணித்த பயணிகள் பேருந்துக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நீடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. அரசுப் போக்குவரத்து கழகத்தின் அலட்சியத்தால் ‘பாஸ்டேக்’ ரீசார்ஜ் செய்யப்படாததும், சுங்கச்சாவடி ஊழியர்களின் பிடிவாதமுமே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என பயணிகள் குற்றம் சாட்டினர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடியும் சுங்கச்சாவடி ஊழியர்கள் வழிவிடாததால், வேறு வழியின்றி அந்தப் பேருந்தின் நடத்துநர் பயணிகளை மாற்றுப் பேருந்து மூலமாகத் திருமங்கலத்திற்கு அனுப்பி வைத்தார். நள்ளிரவில் அரசுப் பேருந்தையே சுங்கச்சாவடி ஊழியர்கள் சிறைபிடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரசுப் பேருந்துகளின் ‘பாஸ்டேக்’ கணக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கப்பலூர் சுங்கச்சாவடியில் நிலவும் இத்தகைய கெடுபிடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

















