மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் 40 நாட்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அதன் முக்கிய நாளாகிய குருத்தோலை ஞாயிறு இவ்வாண்டும் பக்தி உணர்வுடன் அனுசரிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மறைவட்டத்தின் தலைமை ஆலயமான பிரசித்தி புனித சவேரியார் ஆலயத்தில் மறைவட்டதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கைகளில் குருத்தோலை ஏந்தி, ‘ஓசன்னா’ பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்று, இயேசு கிறிஸ்துவின் எருசலேம் பயணத்தை நினைவுகூர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் தவக்கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கூறைநாடு புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை தேவதாஸ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலி நடைபெற்றது.
இதேபோல மயிலாடுதுறை தமிழ் சுவிஷேச லுத்தரன் இம்மானுவேல் ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தின் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு விழா சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் உலக அமைதி நிலவவும், நாட்டில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் நிலைநாட்டப்படவும், நடைபெற்று வரும் போர் பதற்றங்கள் முடிவுக்கு வரவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.
வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படவுள்ளதுடன், ஏப்ரல் 5ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூறும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

















