ஸ்ரீநகர் : “பாகிஸ்தான் மனிதகுலத்திற்கும் சுற்றுலாத்துறைக்கும் எதிரான செயல்களில் ஈடுபடுகிறது” எனக் கடும் கண்டனம் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஜம்மு காஷ்மீரில் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலம் மற்றும் அஞ்சி பாலம் உள்ளிட்ட முக்கிய கட்டிட வேலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமர் மோடி உரையில் கூறியதாவது :
“செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தின் சக்திவாய்ந்த சின்னங்களாகும். இவை வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும். ஆனால், நமது அண்டை நாடான பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு மட்டும் அல்ல, சுற்றுலா வளர்ச்சிக்கும் எதிராக செயல்படுகிறது.”
அவர் மேலும் கூறும்போது, ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து குறிப்பிட்டார்.
“பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்திய சுற்றுலா துறையை பாதிக்கவே இழைக்கப்பட்ட சதி. இது காஷ்மீரி மக்களின் வருமானத்தை தடுக்க பாகிஸ்தான் செய்த முயற்சியாகும்” என்றார்.
மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் கிடைத்துள்ளன.
“மாதா வைஷ்ணோ தேவியின் ஆசிர்வாதத்துடன், இன்று ரயில் சேவையை இங்கு கொண்டு வர முடிந்தது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயிலில் பயணிக்கலாம் என்பது நிஜமாகியுள்ளது” என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இத்துடன், ரூ.46,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய நம்பிக்கையை வழங்கும் என்றும், இவை இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.