சென்னை : திரையரங்குகளில் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டும் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வெளியீட்டின் ஆரம்ப நாட்களில் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவாகும் விமர்சனங்கள் படத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, தடை கோரியிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் கூறியதாவது :
நீதிபதிகளைப் பற்றி கூட மக்கள் எதிர்மறையான விமர்சனங்களை வழங்கும் காலத்தில் உள்ளோம். சமூக ஊடகங்களில் எப்படி என்னை விமர்சித்திருக்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள். அதையெல்லாம் நம்மால் தடுக்க முடியாது. இவை அனைத்தும் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை.
சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் வெளியாகும் விமர்சனங்கள் பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியே. எந்த ஒரு திரைப்படத்தையும் மக்கள் மதிப்பீடு செய்யும் உரிமை அவர்களுக்குள்ளது. தயாரிப்பாளர்கள் எதிர்மறை விமர்சனங்களை தவிர்த்து, நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களை முன்கூட்டியே தடுக்க நினைப்பது யதார்த்தத்தை ஏற்க மறுப்பதாகும்.
எனவே, கருத்துச் சுதந்திரத்தில் தலையீடாக இருப்பதால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.