ஊட்டி: பத்மவிபூஷண் விருது பெற்ற முன்னாள் இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் (வயது 95) இன்று (மே 20) ஊட்டியில் காலமானார். இவரது மறைவு, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும் என தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் 1930 ஜனவரி 5ம் தேதி பிறந்த எம்.ஆர். சீனிவாசன், 1950ல் இயந்திர பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்று, 1952ல் முதுகலைப் பட்டத்தையும், 1954ல் கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
1955 செப்டம்பரில் அணுசக்தி துறையில் பணியமர்ந்த அவர், நாட்டின் பல்வேறு அணுசக்தி திட்டங்கள் மற்றும் சக்தி நிலையங்களின் கட்டுமானங்களில் முக்கிய பங்காற்றினார். அணுசக்தி வாரியத் தலைவர், அணுசக்தித் துறை செயலாளர் உள்ளிட்ட பல உயர் பதவிகளை வகித்துள்ளார். அணுசக்தி வளர்ச்சியில் அவரது தொலைநோக்குப் பார்வையும், நெறியமைப்பும் முக்கிய பங்களிப்பாக அமைந்தது.
அவரது சேவையை மதித்து மத்திய அரசு, இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவில் விருதான பத்மவிபூஷண் விருதை வழங்கி கௌரவித்தது.
ஓய்வுக்கு பிறகு ஊட்டியில் வசித்து வந்த அவர், இன்று (மே 20) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கார்கே இரங்கல் :
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இரங்கல் செய்தியில், “பத்மவிபூஷண் விருது பெற்ற அணு விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசனின் மறைவு, இந்தியாவின் அறிவியல் துறைக்கு பேரிழப்பாகும். அவரது தொலைநோக்குப் பார்வை, அணுசக்தி வளர்ச்சிக்கு வித்திட்டது. அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.