“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கோவில்களின் நிலங்கள் தொடர்பான முழுமையான விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதி புகழேந்தி அவர்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கரூரில் உள்ள ஒரு கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறியது குறித்துத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி விசாரித்தார். அப்போது, அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், இனி வரும் காலங்களில் கோவில் சொத்துகள் தொடர்பான குழப்பங்களைத் தவிர்க்க டிஜிட்டல் முறையிலான தீர்வை முன்வைத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமான இடங்களில் எத்தனை குடியிருப்புகள் உள்ளன, எத்தனை கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன மற்றும் காலி நிலங்களின் பரப்பளவு எவ்வளவு என்பது போன்ற விவரங்களை அந்தந்த கோவில் மற்றும் அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் மூலம், ஆக்கிரமிப்பாளர்கள் யார் என்பதையும், கோவிலுக்கு வர வேண்டிய வாடகை நிலுவைத் தொகையையும் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். கோவில் நிலங்களை மீட்கக் கோரி பல ஆண்டுகளாகத் தொடரப்படும் வழக்குகளுக்கு இந்த டிஜிட்டல் ஆவணங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் இந்த விசாரணையின் போது வலியுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ள நிலையில், அவற்றை ஒருங்கிணைத்து இணையதளத்தில் வெளியிடும் இந்த நடவடிக்கை அறநிலையத் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கரூர் நில விவகாரத்தில் தொடங்கிய இந்த விசாரணை, தற்போது ஒட்டுமொத்த தமிழகக் கோவில் நிலங்களின் பாதுகாப்பிற்குமான வழிகாட்டுதலாக மாறியுள்ளது ஆன்மீகப் பெரியோர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version