நில அளவீடு செய்ய மனு அளித்து 5 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை இல்லை – தேனி வட்டாட்சியர் அலுவலகம் மீது பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு**
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர், அதே பகுதியில் ஆண்டவர் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 சென்ட் நிலத்தை சட்டப்படி விலைக்கு வாங்கி, அதற்கான பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக செய்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், அவர் வாங்கிய நிலத்தின் பின்புறத்தில் உள்ள நில உரிமையாளர்கள் முருகன், அப்பு, பிரின்ஸ், அன்னலட்சுமி உள்ளிட்டோர், தனது நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாகவும், மேலும் குறைந்த விலைக்கு அந்த நிலத்தை தங்களுக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் வெங்கடேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது நிலத்தை சரியாக அளவீடு செய்து எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த மனுவிற்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல், அதிகாரிகள் எதிர்தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு நில அளவீடு செய்ய மறுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், இதையடுத்து நீதிமன்றத்தை அணுகி நில அளவீடு செய்ய உத்தரவு பெற்றிருந்தாலும், அந்த உத்தரவுக்குப் பிறகும் தனது நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்து உரிய ஆவணங்களும் இருந்தும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது நிலத்தை அளவீடு செய்யாமல் அலுவலகத்தால் அலைக்கழிக்கப்படுகிறேன் எனவும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தனது நிலத்தை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.















