ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு 9:00 மணிக்கு மேல் அரசுப் பேருந்து வசதி இல்லாததால், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் நள்ளிரவில் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் அவல நிலை நீடிக்கிறது. மாவட்டத் தலைநகரான ராமநாதபுரத்தின் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தூத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ரயில் நிலையமும் அமைந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து நள்ளிரவில் வரும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரில், இரவு 9:00 மணிக்கே நகரப் பேருந்துகள் (டவுன் பஸ்) நிறுத்தப்படுவது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்துகள் இல்லாத சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள், பயணிகளிடம் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, நள்ளிரவில் குடும்பத்துடன் வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள், ஆட்டோக்களுக்கு அவர்கள் கேட்கும் அதிகப்படியானத் தொகையைக் கொடுக்க முடியாமல் பேருந்து நிலையத்திலேயே தங்கும் சூழல் நிலவுகிறது. “இரவு நேரங்களில் வசூல் குறைவாக இருக்கும்” என்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்துகளை இயக்க மறுப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மதுரை போன்ற மாநகரங்களில் இரவு நேரங்களில் சுற்றுவட்டப் பேருந்துகள் (Circular Buses) இயக்கப்படுவதைப் போல, ராமநாதபுரத்திலும் புதிய நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பட்டணம்காத்தான், கிழக்குக் கடற்கரைச் சாலை ரவுண்டானா, தேவிபட்டினம் சாலை, கேணிக்கரை மற்றும் அரண்மனை வரை நள்ளிரவு 12:00 மணி வரை இடைவிடாமல் சுற்றுவட்டப் பேருந்துகளை இயக்க வேண்டும். இதேபோல் பரமக்குடி, சாயல்குடி மற்றும் திருவாடானை ஆகிய முக்கியப் பேருந்து நிலையங்களில் இருந்தும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரவு நேரச் சேவையை நீட்டிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும், அரசுப் போக்குவரத்துக் கழகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பயணிகளின் பாதுகாப்பான மற்றும் சிக்கனமான நள்ளிரவுப் பயணத்தை உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
















